நேற்று (287-02-2018) சென்னை சைதாப்பேட்டையில், டியூஷன் முடிந்து வீட்டுக்குச் சென்ற ஒரு பள்ளி மாணவியை வழிமறித்த நான்கு பேர், அவரிடம் அத்துமீற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி, டியுஷன் முடிந்து இரவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகே அவர் சென்றபோது, முகத்தைத் துணியால் மூடியபடி நான்குபேர் அந்த மாணவியை வழிமறித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க, மாணவி கடுமையாகப் போராடியுள்ளார். அந்தச் சமயத்தில், பஸ் நிலையம் அருகே ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், மாணவியின் அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. மாணவியை நான்கு பேரும் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு மறைவான இடத்துக்குச் செல்ல முயன்றுள்ளனர்.
'காப்பாத்துங்க...' என்று அலறிய மாணவியின் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களைப் பார்த்த நான்கு பேரும் மாணவியிடமிருந்த செல்போன் மற்றும் 150 ரூபாய் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.
இதையடுத்து, பொது மக்கள் மாணவியை மீட்டு, வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். நடந்த சம்பவத்தை மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, சைதாப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
மாணவியின் எதிர்கால நலன்கருதி, அவர்குறித்த விவரங்கள் வெளியிடாமல், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீஸார் தீவிரமாகத் தேடினர். தேடுதல் வேட்டையில் நான்கு பேர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தினமும் மாணவி, அவ்வழியாக வீட்டுக்குச் செல்வதை நோட்டமிட்டவர்கள்தான் அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்துள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து வந்ததால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவியிடம் பெண் போலீஸார் மூலம் விசாரணை நடத்தியுள்ளோம். அதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
இரவில் டியுஷன் சென்ற வரும் மாணவிகள் கவனமுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment