உடலின் கழிவுத் தொழிற்சாலை - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Saturday 17 March 2018

உடலின் கழிவுத் தொழிற்சாலை


“சிறுநீரகத்தை உடலின் கழிவுத் தொழிற்சாலை அல்லது இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லலாம். உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குச் சிறுநீரகமே பொறுப்பு. உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவு சிறிய உறுப்பான சிறுநீரகத்தின் பணி உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது.

சிறுநீரக மண்டலம்

சிறுநீரக மண்டலம், நமது உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழமுடியும். சிறுநீரகங்கள் (kidneys), உள்சிறுநீரகப்பாதை (Ureters), சிறுநீர்ப்பை (Urinary Bladder), வெளிச்சிறுநீரகக் குழாய் (Urethra) நரம்பு மண்டலம் ஆகியவை ஒருங்கிணைந்ததே சிறுநீரக மண்டலம்.

சிறுநீரகத்தின் அமைப்பு

வயிற்றின் பின்பகுதியில், விலா எலும்புகளுக்குக் கீழே அவரைவிதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தைவிடச் சற்று சிறியதாக இருக்கும். ஒவ்வொன்றும் 200-250 கிராம் எடை கொண்டிருக்கும். பழுப்பு கலந்த கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

நெப்ரான்கள்

ஒவ்வொரு சிறுநீரகமும் 10 லட்சம் நெப்ரான்களைக் கொண்டுள்ளது. இந்த நெப்ரான்கள்தான் ரத்தத்தைச் சுத்தம் செய்யும் வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. ரத்தமானது இதயத்தில் இருந்து தமனிகளின் வழியாக நெப்ரான்களை வந்தடைகிறது. அங்கு கழிவுகள் பிரிக்கப்பட்டு மீண்டும் மற்றொரு குழாய் வழியாக வெளியேறுகிறது. உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் உட்கிரகிக்கப்பட்டு, மீதமிருப்பவை சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரகத்தின் பணிகள்


* உடலில் உற்பத்தியாகும் கழிவுகள், நச்சுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்தல்.

* உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்தல்.

* ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் அளவைச் சீராகப் பராமரித்தல்.

* ரெனின் (Renin) என்ற என்சைம் உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுதல்.

* ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கான ‘எரித்ரோபாய்டின்’ (Erythropoietin) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்.

* ரத்தத்தில் அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையை (PH அளவு) சமநிலையில் வைத்திருத்தல்.

* உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவுகளைப் பராமரித்தல்.

* உடலில் தங்கும் உப்பின் அளவை சீராகப் பராமரித்தல்.

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure)

சிறுநீரகம், கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுகள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோகூட ஏற்படலாம். இந்தப் பாதிப்பை ‘திடீர் சிறுநீரகப் பாதிப்பு’ (Acute Kidney Injury), ‘நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு’ (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.

திடீர் சிறுநீரகப் பாதிப்பு

சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் இத்தகைய நிலையை உடனடியாகக் கண்டுபிடித்தால், உரிய சிகிச்சை மூலம் மீண்டும் இயங்க வைக்கலாம். நோய்த்தொற்று உண்டானாலோ, நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலோ திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். அப்போது சிறுநீரின் அளவு குறைவது, முகம் வீங்குவது போன்ற அறிகுறிகள் தோன்றும். அதேபோல, எதனால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதோ அதற்கான அறிகுறிகள் தென்படும். உதாரணமாக, லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும் எலிக்காய்ச்சலால்கூட சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். அப்போது, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு வரக்கூடிய உடல் வலி போன்றே அறிகுறிகள் இருக்கும்.

முக்கியக் காரணங்கள்

* சிறுநீரகத்துக்குத் தேவையான ரத்த ஓட்டம் தடைபடுதல்.

* சிறுநீரகங்களிலோ அல்லது சிறுநீரகப்பாதையிலோ அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுதல்

* விபத்து காரணமாக ரத்த இழப்பு ஏற்படுவது, வாந்தி - வயிற்றுப்போக்கால் உடலில் நீரிழப்பு (Dehydration) குறைதல், நோய்த்தொற்று, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் எடுத்துக்கொள்வது, பிரசவத்தில் சிக்கல், விஷப் பாம்புக்கடி, வண்டுக்கடி, அறிந்தோ அறியாமலோ ஹேர்-டை அல்லது மயில் துத்தம் உட்கொள்வது போன்ற காரணங்களால் திடீர் சிறுநீரகச் செயலிழப்புகள் ஏற்படலாம். சிலநேரங்களில் காரணங்களே தெரியாமலும்கூட ஏற்படக்கூடும்.

சிகிச்சை முறைகள்

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். உதாரணமாக, வாந்திபேதி காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துபோகும். இதனால் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தஓட்டம் தடைபடும். இந்த நிலையில், இழந்த நீரைச் சமன் செய்வதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும். குளூகோஸ் மற்றும் உப்பு கலந்த நீரை ஊசி மூலம் உடலுக்குச் செலுத்தினால் சரியாகிவிடும். நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகம் பழுதானால், அதற்குரிய ஆன்டிபயாடிக்கைச் செலுத்தினால் பாதிப்பு சரியாகிவிடும்.

நாள்பட்ட சிறுநீரக நோய்

சிறுநீரகமானது, ஒரே நாளில் இல்லாமல் சிறிது சிறிதாகத் திறனை இழக்கும். இது மிகவும் ஆபத்தானது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியவரும். நாள்பட்ட பாதிப்புக்குள்ளான சிறுநீரகத்தை சிகிச்சைகள் மூலம் மீண்டும் செயல்படவைக்க முடியாது. டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளே தீர்வு.

காரணங்கள்

* சர்க்கரை நோய்

* உயர் ரத்த அழுத்தம்

* அதிக உடல்பருமன்

* சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று

* சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic Kidney Disease) போன்ற பரம்பரை மூலம் வரும் சிறுநீரக நோய்கள்

* சில மருந்துகள் மற்றும் நச்சுகள்

* சிறுநீர்ப்பாதை அடைப்பு

* க்ளோமெருலோநெப்ரைடிஸ் (Glomerulonephritis) என்னும் சிறுநீரக அழற்சி

* இவைதவிர, காரணமே இல்லாமல் வரும் சிறுநீரகக் கோளாறுகளும் உண்டு. இதை, ஆங்கிலத்தில் Chronic Kidney Disease of Unknown etiology (CKDu) என்பார்கள். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதால் அவற்றிலுள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்து இந்த வகைப் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இந்த பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. பெரும்பாலும், வெளியேறும் வியர்வைக்கேற்ப தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த வகைப் பாதிப்புகள் உண்டாகலாம் என்கிறது அந்த ஆய்வு.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான தாதுஉப்புப் படிவங்களே கற்களாக மாறுகின்றன. சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, அடைப்பு, போதுமான அளவு நீர் அருந்தாமை, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருள்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.
சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். கற்கள் எங்கே இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சிறிய கற்களாக இருக்கும்பட்சத்தில், அதிகமாகத் தண்ணீர் குடிப்பதன்மூலம் வெளியேற்ற முயற்சி செய்யலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும்.

நோய்த்தொற்று - அறிகுறிகள்

சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection) என்கிறோம். அதாவது சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, சிறுநீர்ப்பை எனச் சிறுநீரக மண்டலத்தில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், காய்ச்சல், வாந்தி, அடி வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.

க்ளோமெருலோநெப்ரைடிஸ் (Glomerulonephritis)

சிறுநீரகத்தின் உள்ளே உள்ள நுண்ணிய முடிச்சு போன்ற வடிகட்டிகள் (Glomeruli) மற்றும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதுவும் உடனடி மற்றும் நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னையாக வெளிப்படலாம். முகத்தில் நீர் கோத்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

சிறுநீரகப் பாதையில் தடை

சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். சிலருக்கு புராஸ்டேட்டின் (Prostate)அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.

டயாலிசிஸ் (Dialysis)

சிறுநீரகம் செயலிழந்தால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது. சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். இதற்கு ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்று பெயர். அதாவது, சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் நேரத்தில், சிறுநீரகத்தின் சில பணிகளை இயந்திரத்தின் மூலம் செய்யவைப்பதே டயாலிசிஸ்.

ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis), பெரிட்டோனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) என இரு வகையான டயாலிசிஸ் இருக்கின்றன.

பெரிட்டோனியல் டயாலிசிஸ்

பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது, வயிற்றில் சிறிய அறுவைசிகிச்சை செய்து நிரந்தரமாகக் குழாய் பொருத்திச் செய்யக்கூடியது. இதற்காக மருத்துவமனை செல்லத் தேவையில்லை. வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டியிருக்கும்.

சிறுநீரக மாற்று சிகிச்சை

சிறுநீரகங்கள் முற்றிலும் செயலிழந்தவருக்குச் சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) செய்ய வேண்டியிருக்கும். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் நிலையில், நச்சுப் பொருள்கள் வெளியேற்றும் பணியை மட்டுமே டயாலிசிஸ் மூலம் செய்ய முடியும். எனவே, இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாதவர்களுக்கும் இந்தச் சிறுநீரக மாற்று சிகிச்சையே தீர்வு.

முன்பு, ஒரே ரத்தப்பிரிவினரிடமிருந்தே சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டுப் பொருத்தப்பட்டது. தற்போது, மாற்று ரத்தப்பிரிவினரிடமிருந்தும் தானம் பெற்றுப் பொருத்தும் அளவுக்கு மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. உயிருள்ள ஒருவரிடமிருந்தோ அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தோ பெற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு தொற்றுப் பாதிப்புகள் வராதபட்சத்தில், ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும்.

சிறுநீரகப் பரிசோதனைகள்

* சிறுநீர்ப் பரிசோதனை மூலம் புரதம் வெளியேறுதல், ரத்தச் சிவப்பணுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று இருப்பதை அறிய முடியும்.

* ரத்தப் பரிசோதனை மூலம், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.

* இந்தப் பரிசோதனைகளில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் வேறு பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்கப்படும்.

* சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித்தொற்று என்று கண்டறியப்படும். அடிக்கடி சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும்.

* சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அடைப்பு போன்றவற்றை அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறியமுடியும்.

தவிர்க்கலாம்... தடுக்கலாம்...

* மரபுவழியாகத் தொடரும் சிறுநீரகப் பிரச்னை, பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க முடியாது.

* சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

* 40 வயதுக்கு மேற்பட்டோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீரில் ரத்த அணுக்கள் சோதனை, ஆண்டுதோறும் செய்துகொள்ள வேண்டும்.

* ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக்கல் உருவாவதைத் தடுக்கும்; சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கும்.

* வார்ம் அப் செய்யாமல் கடினமான உடற்பயிற்சி செய்வதையும், புரோட்டீன் பவுடர்களைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

* புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரகத்துக்கான ரத்த ஓட்டத்தைக் குறைத்துப் பாதிப்பை உருவாக்கும். எனவே, இந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

* ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

* வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.

* வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற காரணங்களால் நீரிழப்பு ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

* நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

* மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

* விளம்பரங்களை மட்டும் நம்பி என்னவென்றே தெரியாத மருந்துகளை உட்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment

Post Top Ad